ZingTruyen.Xyz

என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)

12.என்னை மறந்தாயோ கண்ணம்மா

Nivethamagathi

வாசு தங்களது கடந்தகாலத்தைக் கூறி முடிக்க, உதயன் தன் தாயின் கோபம்தானா தங்களின் இந்நிலைக்கு காரணம் என வெகுண்டு போய் அங்கிருந்த கல் பெஞ்சில் பிரம்மை பிடித்தவன் போல் அமர்ந்திருந்தான்.அவன் கண்கள் கண்ணீரைச் சிந்திக் கொண்டிருந்தது.. விசாகனும் கிட்டத்தட்ட அந்நிலையில் தான் இருந்தான்.

உண்மையில் அவனுக்குத் தானே இழப்பு அதிகம்.. சூப்பர் மேனை பற்றி  நினைவு வந்தவனுக்கு தனது தாய் தந்தையைப் பற்றி தோன்றாமல் இருக்குமா?அவனது தயா.. தனது ராஜி, அவள் வயிற்றில் இருந்த ஏஞ்சல்.. பாஹீயின் கோபம் என அனைத்தையுமே நினைவு கொண்டதில் தலை சுற்றுவதைப் போல இருந்தது..

வலியோடு வாசுவைப் பார்க்க, அவனும் விசாகனைத் தான் பார்த்திருந்தான்.. தனது கைகளை நீட்டி அவனை அழைக்க, தாயினைக் கண்ட சேயாய் வாசுவை அணைத்துக் கொண்டவன் " சூப்பர்மேன்.. நீ இருந்தும் எங்கம்மா அப்பாவ காப்பாத்தாம போயிட்டியே.. ஏன் காப்பாத்தல..ஏன் எனைய விட்டுட்டு போன" என இளைஞனாய் இருந்தவன் தனது பாதுகாவலனைக் கண்டபின் சிறுவனாய் மாறி கேட்க,

அவனை குற்ற உணர்ச்சியோடு பார்த்தவர்

" நான் உன்னோட சூப்பர்மேன் கிடையாது விச்சு.. நான் ஒரு கோழை.. சுயநலவாதி.. தன் பொண்டாட்டி நல்லபடியா இருந்தா போதும்னு பயந்து ஓடிப்போன முட்டாள். டாக்டர் சொன்னத நம்பி

எங்க அவ எனையும் ராஜியையும் பார்த்தா கோபப்பட்டே பைத்தியமாயிடுவான்னு அவ கிட்ட இனி கோபப்படக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டு,

எங்கூட வரேன்னு அழுத உங்களை

  அவளோட சந்தோசத்துக்காக அவகிட்ட ஒப்படைச்சிட்டு வந்த நான் உன் சூப்பர்மேன்ங்கற தகுதி அப்பவே இழந்துட்டேன் விச்சு..உங்களுக்கு என்னோட அரவணைப்பு வேணுங்கற வயசுல தனியா தவிக்கவிட்டுட்டு கண்ணுக்கெட்டா தூரத்துல

நடைபிணமா கிடைந்தேனே என்னை விட மூளை இல்லாதவங்க யாருமே கிடையாதுடா..

ஆனா எதுக்காக இத்தனையும் பண்ணேனோ.. எந்தக் கோபத்த மறைக்க சொல்லிட்டு போனேனோ  இப்போ அதே கோபத்த மறுபடியும் உண்டாக்க திரும்பி வந்துருக்கேன்னு நினைக்கறப்ப எனக்கே என்னை பிடிக்கலடா..என்னோட சொல்லுக்காக அவ கோபப்படாம இருந்தனாலயே அவ பைத்தியம் ஆகப் போறத நினைச்சா என்னோட இத்தனை வருச பிரிவுக்கு அர்த்தமே இல்லாம போயிடுச்சே விச்சு..

என் நண்பன கொண்ணு எங்குடும்பத்த சீரழிய வெச்சவன இன்னும் கண்டு பிடிக்க முடியாத கையாளாகதவனா இருக்கனே

நான்லா வாழறதுக்கே தகுதி இல்லாதவன்டா..

ராஜாங்க மாதிரி பசங்க இருந்தும் அவுங்கள சொந்தங் கொண்டாட முடியாம மூணாவது மனுசனா ஓரமா நின்னு உங்கள பார்த்துட்டு 

போகற கோழைடா நானு "

என இத்தனை நாள் யாரிடம் சொல்லி ஆறுதல் தேடுவது என தவித்துக் கொண்டிருந்தவர் விச்சுவிடம் மடை திறந்த வெள்ளமாய் அனைத்தையும் அவன் பாட்டிற்கு புலம்பினான்.

அச்சமயம்

" போதும் நிறுத்துங்க " என இதுவரை அமைதியாக அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த உதயன் பேச ஆரம்பித்தான்.

" நீங்க சொல்றது சரிதான்.கண்டிப்பா நீங்க ஒரு கோழை..வடிகட்டுன முட்டாள்"

" ,உதயா"

" ,நீ சும்மா இரு விசாகா.. உண்மையாவே இவர் முட்டாள்தான்டா.  எந்தப் பிரச்சனைக்கும் ஓடி ஒளியறது தீர்வு ஆகாதுடா..அவர் மட்டும் அம்மாகிட்ட அவுங்க கோபம் கொறஞ்ச பிறகு பேசிருந்தா கண்டிப்பா உண்மைய புரிஞ்சிருப்பாங்க.. அம்மா ஒன்னும் எடுத்த உடனே இவர சந்தேகிக்கலயே.. அத்தனை ஆதாரங்கள் கண் முன்னாடி இருந்தும் எம்புருசன் மேல நம்பிக்கை இருக்குனு தான சொல்லிட்டு இருந்தாங்க.. எந்த ஒரு மனுசனும் ஏதோ ஒரு இடத்துல தப்பு பண்ணுவாங்க.. அவுங்களும் தனனோட அப்பா சாகுற கடைசி தருவாயில எழுதனது பொய்யா இருக்காதுன்னு ஒரு செகன்ட் யோசிச்சிட்டாங்க.. அதுக்காக அவுங்க தாலிய கழட்டினது நான் சரின்னு சொல்லல.. அதப்பாத்தா யாரா இருந்தாலும் மனசொடஞ்சு தான் போவாங்க.. அதுக்காக தனியா விட்டுட்டு போவாங்களா..சும்மா அம்மாவோட கோபம்..கோபம்னு அதையே சொல்லாதீங்க.உங்க மேல வெச்ச காதலாலதான் இத்தனை வருசம் தன் சுயத்தையே மாற்றிட்டு ஏதோ துறவி மாதிரி இருந்தாங்க.ஆனா நீங்க அவுங்களுக்காக என்ன பண்ணீங்க..அவுங்க மேல கோபப்பட்டு ஓடி ஒளிஞ்சிகிட்டிங்க.."

" தயா நீ சொல்றத நான் யோசிக்காம இருப்பனாடா.. எனக்கும் அவ மேல கோபம்லா எதுமே இல்ல.. எங்க எனைய பார்த்தா அவ உணர்ச்சி வசப்பட்டு அவளுக்கு எதாச்சும் ஆகிடும்னு "

" ம்ச்.. சும்மா அதையே சொல்லாதீங்க "என பேச்சைத் தொடங்க,

" அவர் சொல்றதுதான் சரி மிஸ்டர்.உதயன் " என்றபடி வந்தான் ரஞ்சித்..

" டாக்டர் எங்கம்மாக்கு என்னாச்சு." என பதற

" அவுங்க ஆழ்ந்த உறக்கத்துல இருக்காங்க.. இப்போதைக்கு அவுங்க எழுந்தா தான் எதுமே சொல்ல முடியும்.. பட் என்னால கண்டிப்பா ஒன்னு சொல்ல முடியும்.. இவர் துணை இருந்தா அவுங்கள பழைய நிலைக்கு கொண்டு வர என்னால முடியும்.. "என நம்பிக்கையாக கூற, அனைவர் முகத்திலும் சின்ன புன்னகை.

" நிஜமாவா "

" நிஜம்தான்..விசு.எந்த பிரச்சனைக்கும் காலம்தான் சரியான மருந்து.. வாசு சார் எம்கிட்ட சொன்னத வெச்சுப் பார்க்கும்போது அவுங்களோட பிரச்சனைய என்னால புரிஞ்சிக்க முடியுது.. கோபம் எல்லோருக்குமே வரும்.. ஆனா எல்லாருக்குமே ஒரே மாதிரி ஒரே அளவுல வரதில்ல.. சிலருக்கு என்ன செஞ்சாலும் கோபமே வராது..சிலருக்கு சின்னச் சின்ன விசயத்துக்கு கூட அதிக கோபம் வரும்..உங்க அத்தைக்கு தன்னை சேர்ந்தவுங்களுக்கு எதாச்சும்னா நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு கோபம் வந்துரும்..

கோபம் அதிகம் வர சில பேர் தியானம் யோகாலாம் செஞ்சு கோபத்த கட்டுப்படுத்தி வெற்றியும் கண்டிருக்காங்க.. ஆனா உங்க அத்தை விசயத்துல எதுமே எடுபடல.. கிட்டத்தட்ட இதுமே ஒரு வியாதி தான்..அவுங்களுக்கு சின்ன வயசில தலைல  அடிபட்டு மூளை நரம்புகள் சிலது பாதிக்கப்பட்டு இருக்குது.. ஆனா அதுனால எந்த பாதிப்பும் இல்லாதனால அலட்சியமா இருந்துருக்காங்க.

என்னைப் பொறுத்தவரை இப்பவும் அதுனால எந்த பாதிப்பும் வராது அவுங்க  கோபப்படாம இருந்தாங்கனா.. "

"அவுங்களுக்கு முன்ன டிரீட்மென்ட் பண்ண டாக்டர் சொன்னது மாதிாி  கன்டினியூவா அவுங்க கோபப் பட்டுக்கிட்டே இருந்தாங்கனா அவுங்க மனநிலை சரியில்லாம போறதுக்கு நிறைய வாய்ப்பு இருந்திருக்கு.. நீங்க இதை எப்படி எடுத்துக்கிட்டாலும் அந்த வகைல வாசு சார் இவங்கள விட்டு பிரிஞ்சதுதான் அவுங்கள இத்தனை வருசம் மனுசியா இருக்க வெச்சிருக்கு"

" ஆனா இப்போ "

" நீ என்ன கேட்க வரேன்னு புரியுது..எப்படி ஒரு மனுசனுக்கு கோபம் வரது கெடுதலோ  அதே மாதிரி கோபம் வராம இருந்தாலும் கெடுதல்தான். இதுவும் உணர்ச்சிகளின் வெளிப்பாடு தான்.. அதை அவுங்க பொத்தி பொத்தி வைக்கறதாலயும் கண்டிப்பா கெடுதல்தான்.. கோபத்த வெளியே காட்டாம அடக்கி வெச்சா அது வன்மமா மாறி கொலை பண்ற அளவுக்கு கூட தூண்டும்.. கிட்டத்தட்ட சைக்கோ மாதிரி.. பாஹீஸ்வரி மேடம் இப்போ அந்த நிலைலதான் இருக்காங்க.. சாதாரணமாவே அவுங்களுக்கு கோபம் அதிகமா தான் வரும்..இதுல அவுங்களுக்கு ஏற்பட்ட நரம்பு பாதிப்புனால அதை அதிகம்தான் படுத்தும்.. அந்த சூழ்நிலைல கூட இவர் சொன்ன ஒரு வார்ததைக்காக கோபமே படாம இருந்துருக்காங்கனா அதுக்கு காரணம் அது இவர்மேல வெச்சிருக்க காதல்னால மட்டுந்தான்.. சும்மா அவுங்க இவர சந்தேகப்பட்டாங்க.. தாலிய கழட்டிட்டாங்கனு  அவுங்கள குறை சொல்லாதீங்க.. அவுங்க அதீத கோபத்துல இருக்கும்போது அவுங்களோட மூளை சிந்திக்கற திறன சுத்தமா மறந்து உணர்வுகளோட பிடில அப்படி நடந்திருக்காங்கஅதுக்காக அவுங்க செஞ்சதையோ இல்ல இவர் செஞ்சதையோ நான் நியாயப்படுத்தி பேசல..

அவுங்களுக்கு வாசு சார எந்தளவுக்கு பிடிக்குமோ அதே அளவுக்கு அவுங்க குடும்பத்தையும் பிடிக்கும்..வாசு சார் மேல இருக்க காதலால அவுங்கள நம்புனாலும் தன்னோட அப்பா அண்ணா மேல இருக்கற பாசம் கண்டிப்பா அவர தேவாவாத்தான் அவுங்க கண்ணுக்கு காமிச்சிருக்கும்..  அவர் போகாம இருந்திருந்தா தேவான்னு நினைச்சு  இவரையும் கொன்னு தானும் செத்திருப்பாங்க,அதை மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும் "

" ஆனா அம்மாக்கு திரும்பவும் கோபம் வந்தா "

" வராம நீங்கதான் பார்த்துக்கனும்.. அவுங்க மனசுல இருக்கற எல்லாக் கேள்விக்கும் பதில் கிடைக்கனும்"

" சரி இதுக்கு கடைசியா என்னதான் தீர்வு இரஞ்சித் "

" உண்மையான தேவா இங்க வரணும்.. அவுங்க வாயால செஞ்ச தப்ப ஏத்துக்கிட்டு தண்டனை அனுபவிக்கனும்" என்றதும் உதயன் வாசுவைப் பார்க்க,

" அவன பார்த்த ஒரே ஆள் ராஜி மட்டுந்தான்.. நானும் அவன எப்படிலாம் தேடிப்பார்த்தேன்.. ஆனா கடைசி வரை கிடைக்கவே இல்ல " என இயலாமையோடு சொல்ல,

" அவன நான் பார்த்திருக்கேன் " என்று விசாகன் சொன்னதும் அனைவரின் பார்வையும் அவனை மொய்க்க,

" ஆமா நான் பார்த்திருக்கேன்..  கொலை நடந்த அன்னைக்கு ராஜி ஹாஸ்பிடல்க்கு எனைய வேண்டான்னு சொன்னதும் நான் அழுதுகிட்டு தாத்தா ரூம்ல இருக்கற ஈசி சேர்ல படுத்து அப்படியே தூங்கிட்டேன்.. அப்பா கத்தற சத்தம் கேட்டு முழிச்சிப் பார்த்தா அப்போ தேவான்னு சொல்லிட்டே அப்பா கீழே விழுந்துட்டாங்க.. அதுக்கு முன்னாடியே அம்மாவும் தாத்தாவும்  இரத்த வெள்ளத்துல கீழ கடந்தாங்க..அதைப் பார்த்ததும்

நான் பயத்தில  மயங்கிட்டேன்..

எனக்கு நினைவு வரும்போது அப்பா அம்மா தாத்தாக்குலாம் மாலை போட்டு எல்லோரும் அழுதுட்டு இருந்தாங்க..சூப்பர் மேன் வந்தவுடனே இதை சொல்னும்னு நினைச்சிக்கிட்டே இருந்தேன்.. ஆனா அவர் வரவே இல்ல..

அத்தைக்கிட்ட இதெல்லாம் அப்பவே சொல்லயிருந்தா அவுங்களாச்சும் சந்தோசமா இருந்துருப்பாங்க.. ம்ச்.. அதுக்குள்ள எனக்கும் ஜன்னி வந்து பழசெலாம் மறந்து போயிட்டு..

ஆனா எப்போ நாகு சித்தப்பா அப்பா அம்மாவ கொலை பண்ணிட்டாங்கனு எங்கிட்ட சொன்னாங்களோ எனக்கு அப்பவே அந்த கொலைகள் செய்யும் போது நடந்த சம்பவங்கள் மட்டும் நினைவு வந்துச்சு..நான் ரோகிணியோட அப்பாவா அவன் தான் வருவான்னு நினைச்சேன்..

ஆனா வந்தது சூப்பர்மேன்.. உதயாவ அப்படியே உறிச்சு வெச்சிருக்கற சூப்பர்மேன்.. கண்டிப்பா அந்தக் கொலைய அவர் செய்யலன்னு எனக்கு நல்லா தெரிஞ்சிடுச்சு...ஆனா எனக்கு அவரப் பத்தி வேறு எதுவும் அப்போ தெரியல.. ஆனா எப்போ அவர கருப்புச்சட்டைல பார்த்தேனோ எனக்கு எல்லாம் தெளிவா நினைவு வந்துடுச்சு " என்றான் விசாகன்.

" அப்போ தேவாவ நீ பார்த்துருக்கறதான விச்சு.. அவன் எப்படி இருப்பான் " என வாசு சந்தோசம் கலந்த குரலில் கேட்க,

அவனும் நம்பிக்கையுடன்

"அவனோட முகம் எனக்கு இன்னும் நினைவு இருக்கு.. கண்டிப்பா அவன கூடிய சீக்கிரத்துல கண்டுபிடிச்சடலாம்.. அத்தையையும் பழைய மாறி மாத்தி உங்கோட சேத்தி வெச்சிடலாம் சூப்பர்மேன் " என்றதும் அவன் கூறியதைக் கேட்டு  அவனைக் கட்டிக் கொண்டு

"சூப்பர் விச்சு.. சூப்பர் " என்க, அவனும் புன்னகைத்தவாரே

"சூப்பர்மேன்.. நான் இப்போலா இந்த புகழ்ச்சிக்குலாம்  மயங்குறது இல்ல "என்க,

அவனை  வாஞ்சையாய் பார்த்தவர்

" ம்ம்.. அப்போ உனக்கு ரொம்ப பிடிச்ச பேரான அரை டவுசர்ன்னு கூப்பிடறேன் " என்றதுமே விசு அவன் தோளில் செல்லமாக தட்ட, அது அவனது காயத்தில் பட்டது..

" ஸ்ஆ "

" என்னாச்சு.. சூப்பர்மேன் " ,என்றதும் வாசு மறுப்பதை மீறியும் வாசுவின் காயத்தையும் பாஹீ தான் அதற்கு காரணம் என்பதையும் கூறினான் ரஞ்சித்.

வாசுவின் மேல் இன்னும் கோபமாய் இருந்த உதயன் கூட அதைக் கண்டதும் மனமிறங்கி விட்டான். அவன் மெதுவாக வாசுவின் காயத்தை ஆராய அவனை கனிவாக பார்த்த வாசு " தயா" என அழைக்க,

"  "

" தயா என்னை மன்னிக்க மாட்டியா கண்ணா "

"

" பதில் சொல்லுப்பா "

" எங்கம்மா குணம் ஆனதும் கண்டிப்பா மன்னிக்கிறேன் " என்று அவன் முகத்தை திருப்பிக் கொள்ள, அவன் செயல் வலித்தாலும் அதனை தந்தையாக இரசித்தான் வாசு..

அந்நேரம் செவிலியர் ஒருவர் பாஹீ கண் விழித்து விட்டதாக வந்து கூற அவர் எந்த மன நிலையில் இருக்கின்றாரோ என எண்ணி அனைவரும் சற்று பயத்துடனே அவரைக் காண சென்றனர்.

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

பெரிய குளம்

" ஹேய்.. ஸ்டாரு.. மத்தியானம் என்னை சாப்ட வரச் சொல்லிட்டு பிம்பிள் கிழவியும் நீயும் வாசல்ல உக்கார்ந்து இன்னா பண்ணிட்டு இருக்கீங்கோ " என முறுக்கை வாயில் அரைத்துக் கொண்டே வந்து சேர்ந்தான் சண்முகப் பிரியன்

" சண்முகா போயிரு.. கடுப்ப கிளப்பாத"

"  ஏய்.என்ன ஓவரா சளிச்சிக்கற... எங்கம்மா மீன் குழம்பு வெச்சிட்டு எனைய சாப்புடு ராசா.. சாப்புடு ராசான்னு எப்படி கெஞ்சுச்சு தெரியுமா.. ஆனா நான் உன்ற வீட்ல தான் திம்பேனு பொறிச்சு வெச்சிருந்த மீன்ல வெறும் பத்தே மீன மட்டும் கொஞ்சமா டேஸ்ட் பாத்திட்டு பசியோட பறந்து வரேன்.. கையொடஞ்ச நீதான் சும்மா இருக்கேனா..இந்த ஆட்டாங்கல்லு அலமேலுக்கு என்ன வந்துச்சு " என பருவதத்தை வம்பிழுக்க, அவரோ உதி சமையல் செய்யும் அழகில் நொந்து போய் அமர்ந்திருந்தவர் அவனது கேலிப் பேச்சில் சீறிக் கொண்டு " அடேய்..சண்முகா.. உன்ற எகத்தாளப் பேச்செல்லாம் என்ற மகன் வருவான்..நெஞ்சுல உரமிருந்தா அவன்கிட்ட பேசுடா.. வெட்டிப் பயலே " என தன் திருவாயை ஆரம்பித்த அவர் முடிக்கவே இல்லை.. பேசிக் கொண்டே இருந்தார்.

ரோகிணி அவனை முறைக்க " இஇஇஇ அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. " என்றவன் அவளை உள்ளே இழுத்துச் சென்றான்..

" ஆமா எங்க என் தேவதை"

" ஹேய் "

" ஏய் என்ன ஸோல்டர ஏத்தற.. ஹான் "

" ஓவரா பண்றடா.. அவ உனக்கு அக்கா "

" ஸ்டாரு நீயெல்லாம் ஓல்ட் ஜெனரேசன்.. இதெல்லாம் உனக்குப் புரியாது..சரி உங்கிட்ட உன்னை என்ன வெட்டிப் பேச்சு.. எங்க என் ஆளு "

" ம்ம்..உங்க ஆளுதான் உங்களுக்காக யூடியூப பார்த்து பார்த்து சமைச்சிட்டு இருக்காங்க "

" ரியலி "

" எக்சேட்லி "

" ஆனா நீ சிரிக்கறத பார்க்கும்போது ஏதோ தப்பா தெரியுதே.. ஏய் நிஜமா சொல்லு.. என் ஆள் இதுக்கு முன்னாடி சமையக்கட்டு பக்கம் போயிருக்காளா இல்லையா " என்று கேட்டதில் ரோகிணியின் சிரிப்பு அதிகமானது.. அவர்கள் ஒன்றாக இருந்த அந்த மூன்று வருடங்களில் உதி சிரமப்பட்டு மனப்பாடம் பண்ணி கற்றுக் கொண்டது சாம்பாரும் தேங்காய்ச் சட்னியும் தான்.. அதையே சில பல சொதப்பல்களுக்குப் பின்பு தான் ரோகிணிக்கு விசப்பரீட்சை வைத்து கற்றுக் கொண்டாள்.. இன்று சண்முகனுக்காக சமையல் செய்வேன் என அடம்பிடித்து உள்ளே சென்றவள் காலையிலிருந்து இரண்டு வடை சட்டியை கருக்கி இருந்தாள்..பத்தாதற்கு தாளிக்கும்போது தீப்பொறி திருமுகம் போல  எரிமலைக் குழம்பாய் நெருப்பை பொங்கி வரச் செய்து சமையற்கட்டையே ஒரு வழி செய்திருந்தாள்.. பருவதம்தான் அவளைத் திட்டிக் கொண்டே மீண்டும் சுத்தம் செய்து கொடுத்தார்..

" இவ வேற ஆவூன்னா டீரீம்க்கு போயிடறா"

என்ற சண்முகனின் கத்தலில் தன் சிரிப்பை அடக்கியவள்

" உதி உனக்காகத் தான்டா வராத சமையல துரத்திப் பிடிச்சிட்டு இருக்கா.. அதுனால எந்தக் குறையும் சொல்லாம சாப்பிடு " என்கவும், " அட போ ஸ்டாரு.. என் தேவதை கையால பாய்சன் கொடுத்தாலும் அதை பாயசமாறி ருசிச்சி குடிப்பேன் " என்று கெத்தாக சொல்லி அவளிடம் பழிப்புக் காட்டினான்.. அவன் ரோகிணியிடம் விளையாட்டாக சொன்னாலும் உதியும் அவனுக்கு அக்காதான்.. ரோகிணியை சீண்டவே இவன் அவளை தேவதை என்றழைப்பதும் உதி இவனை சன்பேஸ் லவ்வரைச் சுருக்கி லவ்வர் என்றழைப்பதும் என மாறி மாறி இவளை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தனர். பாவம் இவர்கள் விளையாட்டாக பேசிக் கொண்டிருக்க, அதில் காண்டான ஒருத்தன் இவர்களை இதை வைத்துக் கொண்டே பாடாய்படுத்தப் போவதை இவர்கள் அறியவில்லை..

உள்ளே உதி ஆர்வமாக சமைத்துக் கொண்டிருந்தாள்.. பருவதம் தன் பேரனுக்கு
கேசரி மிகவும் பிடிக்கும் என்று சொல்லியிருக்க முதலில் அதைத்தான் செய்திருந்தாள்.. ஒரு ரெசிபிற்கு ஏழு சேனல்களை அலசி ஆராய்ந்தவள் அனைத்து வழிமுறைகளையும் கரைத்துக் குடித்தபின்பு தான் களத்தில் இறங்கியிருந்தாள். அவனுக்குப் பிடித்ததில் ஏன் இத்தனை ஆர்வம் காட்ட வேண்டும் என பேதை நெஞ்சுக்குத் தெளிவாகத் தெரியவில்லை..

சிறிது நேரத்தில் உதயனின் நினைவுடனே   செய்து முடித்தவள் தனது ஆசைத் தம்பியின் முன் டம்ளரும் ஸ்பூனுமாக வந்து நின்றாள்..

" லவ்வர் பாய் "

" சொல்லுங்க லவ்லி லேடி "

" சாப்டு எப்படி இருக்குனு சொல்லு " என மனதைக் கல்லாக்கிக் கொண்டு சொன்னவள் ரோகிணிக்கும் ஒரு டம்ளரைக் கொடுத்தாள்.

" பியூட்டி பார்க்கவே செமயா இருக்கு..இந்த டிஸ் பேரு என்ன? நான் கிராமத்துலயே இருந்தனாலயோ என்னவோ இதெல்லாம் சாப்டதில்ல " என சண்முகன் அப்பாவியாய் சொல்ல, இதுவரை தயங்கி நின்றவள் மனதுக்குள் கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு " ரவா பாயாசம் " என்றாள்..

ரோகிணி ' வீட்ல பாலே இல்லையே இவ எதுல பாயாசம் வெச்சிருப்பா.. ஆரஞ்சு கலர்ல வேற இருக்கு..பாயாசம் இந்தக் கலர்ல இருக்காதே.. ' என்று ரோகிணியின் ஏழாம் அறிவு வேலை செய்ய அவள் அதனைத் தொட்டுக் கூட பார்க்கவில்லை..

சண்முகம் " வாரே வா " என புகழ்ந்தபடியே வாயில் வைக்க நவரசமும் அவன் முகத்தில் நர்த்தனமாடியது.. பாவம் அவள் செய்த கேசரியில் ரவை கட்டி கட்டிக்  கொண்டதால் தண்ணீரை அதிகமாக ஊற்ற, பின்னர் தண்ணீர் அதிகமாக, மாறி மாறி அப்படியே செய்தவள் வெப்பத்தில் கொதிக்கும்  தண்ணீர் அதிகமாக வெளியே தெறிப்பதால் அத்தோடு அடுப்பை நிறுத்தி விட்டு கேசரியை பாயாசமாக்கி பரிமாறிவிட்டாள். இந்தக் களேபரத்தில் கடைசியாக சேர்க்க வைத்திருந்த சர்க்கரையை மறந்திருந்தாள்.

சண்முகம் தான் ' பாவி ஒரு பேச்சுக்கு சொன்னா பாயாசத்தையே பாய்சன் மாதிரி பண்ணிருக்கியே ' என அவளை மனதில் தி்ட்டிக் கொண்டே அதனை துப்பவும் முடியாது விழுங்கவும் முடியாது தவித்துக் கொண்டிருந்தான்.. அவள் அத்தோடு விட்டிருந்தாள் கூட பரவாயில்லை..

மிச்சமிருந்ததை பெரிய தூக்குபோசியில் ஊற்றிக் கொண்டு வந்து ' நைட் சாப்பிடும்போது இதைக் குடிச்சிக்கோ' என்று கொடுக்கவும் பயந்து ஓடியவன்தான் அடுத்த நாள் காலை வரை அந்த வீட்டுப் பக்கம் வரவே இல்லை..

ரோகிணி உதியும் அவனது முக பாவத்தை நினைத்து சிரித்துக் கொண்டிருக்க அப்போது உதிக்கு உதயனின் எண்ணிலிருந்து அழைப்பு வர, அதனை ஆசையாய் உயிர்பித்து பேசியவளின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி.. அவள் சந்தோசத்தில் ரோகிணியைக் கட்டிக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தம் பதித்தாள்..

பாஹீ மீண்டு வருவாரா?
உதியின் இந்த மகிழ்ச்சி நிலைக்குமா? என்பதை பொறுத்திருந்து காண்போம்.. 😍😍

Bạn đang đọc truyện trên: ZingTruyen.Xyz